திப்ரூகர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் தீமாப்பூர்
வருகையில் B1 கிட்டத்தட்ட நிரம்பியது. முக்கால்வாசிபேர் ராணுவ வீரர்கள். நாகாலாந்து
தீவிரவாத போராளிகளை ஒடுக்கும் இந்திய ராணுவப்படையை சேர்ந்தவர்கள். அந்த பெட்டி
முழுவதும் அவர்கள்தான் என்பதில் ஒரு சுதந்திரம் அவர்கள் முகத்தில் தெரிந்தது.
எல்லோருமே தென்னிந்தியர்கள். விடுமுறைக்கு செல்கிறார்கள். இந்த விடுமுறையில்
தங்கள் வாழ்வின் கடமைகளை கொஞ்சம் முடித்து வரவேண்டும். செல்வத்துக்கு திருமணம்.
மேனனுக்கு நிச்சயம். சுகுமாருக்கு வீடு கட்ட வங்கி கடன் வாங்க வேண்டும்.
வெங்கட்டுக்கு சொத்து பிரிக்கவேண்டும். தினேஷுக்கு நேர்த்திக்கடன்
செலுத்தவேண்டும். இப்படி பல கடமைகள். ஆரம்பத்தில் பேச்சு கடமைகள் சம்பந்தமாகவே
இருந்தது. ஊருக்கு செல்லும் மகிழ்ச்சி எல்லோர் முகத்திலும் இருந்தது.
செல்வத்துக்கு கொஞ்சம் அதிகமாகவே. அவன் மட்டும் போன் பேச அடிக்கடி கதவு பக்கம்
போய்வந்தான்.
நேரம் செல்ல செல்ல பேச்சு தாங்கள்
பணியாற்றிய மற்ற ரெஜிமென்ட் பற்றியதாய் மாறியது. சிலர் அருணாச்சல் குளிரில் ஐஸ்
கட்டிகளை சுத்தம் செய்தததை பற்றியும் சிலர் காஷ்மீரில் போரிட்டது பற்றியும் சிலர்
அங்கு கிடைக்கும் உணவு பற்றியும் சமயங்களில் பெரிய அளவில் சமைத்த உணவுகள்
பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள். பேச்சு கொஞ்சம் கொஞ்சமாய் அலுப்புத்தட்ட
துவங்கியது. அவர்கள் மது அருந்த துவங்கினார்கள். கொஞ்சம் கொஞ்சமாய்தான். சுகுமார்,
தான் ஒருமுறை போட்டுக்கொடுத்த தேநீர் தன் உயர் அதிகாரிக்கு பிடிக்காமல் போனதற்காக ஆபாசமாக
திட்டி கோப்பையை முகத்தில் வீசியதை பற்றி சொல்லி வருத்தப்பட்டார். அவரர் தாங்கள்
அனுபவித்த அவமானங்களை சொல்லித் தீர்க்க முயன்றனர். கவலையில் கொஞ்சம் கூடவே செய்தது
குடி.
குடி ஏற ஏற குடி கெடுத்த
கதைகள் துவங்கின. தாங்கள் செய்த காம அதிகாரங்களை அடுக்கினர். முதல் கதையின், “என்
பொண்டாட்டி நெனப்பு வரப்பெல்லாம் அந்த மளிகை கடைகாரிட்டதான் போவேன்” என்றபோது, செல்வம் மட்டும் கதவுக்கு போய்விட்டான்.
‘“ஷில்ப்பி”. சொல்லும்போதே
அவர்களுக்கு வாயெல்லாம் பல். ஆறு மாச கைக்குழந்தையும் அவளும் ராணுவ முகாமுக்கு
அருகில் உள்ள குடியிருப்பில் வாழ்கிறார்கள். அவள் மார்பகங்கள் பால் சுரக்க
மறுத்தாலும் அதை பார்க்க முகாமில் அத்தனை அத்தனை கண்கள். அவள் இதுவரை பல முறை அந்த
சாலையில் கடந்திருந்தாலும் மருந்துக்கும் அவர்களை பார்த்ததில்லை.
அன்று பார்த்தாள். எதோ
வேண்டும் என்று மட்டும் அவனுக்கு புரிந்தது.
அவன் கேட்டபோது சொன்னாள், “பிள்ளைக்கு
பசி. அழுகுது. பால் பௌடர் வாங்க காசில்ல. வங்கியும் தெறக்கல. கைல இருக்குற பணமும்
செல்லல”.
அவளிடம் இருந்தது வெறும்
572 ரூபாய். அதில் ஒன்று 500 ரூபாய். இங்கு எந்த ஏடிஎம் மும் இயங்கவில்லை.
கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆயிற்று அது இயங்கும் என்று நம்பி.
பால் பௌடரை கையில்
வைத்துக்கொண்டு கதைவை அடைத்தான்.
முதலில் துப்பாக்கி முனை
முலையை தீண்டியது. பின் இயந்திரம் இயங்கத்துவங்கியது.
“பசினு வந்துட்டா பட்டாளத்தான்ட்ட
படுத்துதானே ஆகணும்”.’
மது அவர்கள் கற்பனை
செய்துக்கொள்ள வசதி செய்தது. அந்த எழுச்சியுடன் தூங்கப்போனார்கள்.
செல்வம் மட்டும் போனில்
பேசிக்கொண்டிருந்தான். கும்மிருட்டில்.
காலையில் சூரியன் உதிக்கும் முன்பே வாசலை கூட்டத்துவங்கினாள்
மீனாம்பாள். பெயர் மீனாம்பாள் என்றாலும் அவளை ‘முசுடு’ என்றுதான் ஊர்க்கார்கள்
அழைப்பார்கள். கணவன் இறந்து இருபத்தி ஐந்து வருடங்கள் ஆயிற்று. இத்தனை
வருடங்களாய் குடியிருப்பை விடுத்து அவள்
மட்டும் தனியாக வயலை தூற்றிவிட்டு சின்ன வீடு கட்டி இங்கு வந்து வாழ்கிறாள்.
வாசல் கூட்டிக்கொண்டு இருந்தவள் வெலக்கமாரை நிறுத்தி நிமிர்ந்து,
“டேய் நட்ராசு! சொக்கன டீக்கடையில பார்த்தா வரசொன்னேனு சொல்லுடா!”
என்றாள்.
“சரி ஆத்தா. சொல்றேன்”.
சொக்கன் முனிக்கோயில் பூசாரி. அந்த ஊரில் சேரி ஆட்களை தவிர அவள் மட்டும்தான்
முனியை வணங்குபவள். தினேஷுக்கு பாம்பு தீண்டியதில் இருந்து முளைத்த நம்பிக்கை.
தினேஷ் ஒரே மகன். ராணுவத்தில் வேலை. இந்த ஊரில் அவன் பிறந்த காலத்து குழந்தைகளின்
பெயரெல்லாம் ‘ஷ்’இல் தான் முடியும். அவன் மாமா காலத்து பெயர்கள் ‘நாதன்’னிலும்,
அப்பா காலத்து பெயர்கள் ‘சாமி’யிலும், தாத்தா காலத்து பெயர்கள் ‘அய்யா’வென்றும்
முடியும். இப்படியாய் கருப்பைய்யாவுக்கு பிறந்த பழனிசாமியின் மகன் தான் தினேஷ். தினேஷ்
தன் மாமா லோகநாதனின் உதவியால் தான் ராணுவத்தில் சேர்ந்தான். இப்போது அஸ்ஸாமில்
‘ரெட் ஹார்ன்ஸ்’ படைப்பாசறையில் பணியாற்றி
வருகிறான்.
“என்ன ஆத்தா! கூப்ட்டுட்டிகலாமே!”
“முனியையாவுக்கு பூச போடணும்டா. அடுத்த வாரம் புதன்கிழமை” சாணி
மொழுகிக்கொண்டே சொன்னாள்.
“தம்பி வருதா ஆத்தா?”
“ஆமாடா”
“அப்ப அம்மணியும் சின்னதம்பியும் வருவாகளே?”
“ம்ம்ம். பன்னேன்ற காருக்கு வாராக” என்றவள் பூசைக்கு வேண்டிய பொருட்கள் வாங்க 2௦௦௦ ரூபாயை நீட்டினாள்.
வாங்கிக்கொண்ட கொக்கன் கிளம்பினான்.
ஆட்டை குளத்தில் குளிப்பட்டிகொண்டிருக்கையில் நேரம் பன்னிரண்டு அரை.
பேருந்திலிருந்து இறங்கி மருமகளும் பேரனும் வந்தார்கள். எப்போது தினேஷ் வந்தாலும்
அவன் வருவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் மருமகள் பிரவீனுடன் தன் வீட்டிலிருந்து வருவாள்.
இது தினேஷுக்கும் தெரியும். கண்டு கொள்ளமாட்டான்.
பிரவீன் நேரே ஆட்டிடம் வந்து, ‘காஷ்மீர் எப்புடி இருக்க?’ என்று
கேட்டு ஆட்டு வயிற்றில் தடவினான்.
போனமுறை பிரவீன் வரும்போது ‘காஷ்மீர்’ ஆட்டுக்குட்டியாக இருந்தது.
“இதுக்கு ஏன் ஆத்தா ‘காஷ்மீர்’ னு பேரு?”
“உங்கப்பன் காஷ்மீருக்கு போனப்ப, ‘முனியையா நீதான் பொறுப்பு உம்புள்ள
பாதுகாப்புக்கு. அவன் அங்கிருந்து வந்ததும் உனக்கு கேடா வெட்டி பூச வைக்குறே’னு
வேண்டிகிட்டேன். அதான் இந்த குட்டிக்கு ‘காஷ்மீர்’ னு பேர் வச்சேன்”.
இப்போது காஷ்மீர் ஆடாக வளர்ந்து நின்றது.
அவன் பொழுதுகள் காஷ்மீரோடுதான் கழிந்தது. காஷ்மீரை தூக்க
முயற்சிப்பான். கட்டிப்பிடிப்பான். முத்தம் கொடுப்பான். வித விதமான இலைகளை,
பூக்களை பறித்து வந்து ஊட்டுவான். மாலை செய்து அவன் கழுத்திலும் காஷ்மீர்
கழுத்திலும் போடுவான். அவன் கையில் பொங்கல் மணியும் கோபி கத்தியும் எப்போதும்
இருக்கும். அப்பா வாங்கிவந்த விளையாட்டு சாமான்கள் அலுத்தவனுக்கு காஷ்மீர் மட்டும்
அலுக்கவே இல்லை. பூசை நாள் நெருங்குவது கூட தெரியாமல் தினம் தினம் விளையாட்டுதான்.
பூசை நாள். குளிப்பாட்டிய ஆட்டை கூட்டிக்கொண்டு தந்தையுடன்
புறப்பட்டான் பிரவீன்.
“கொரபோடுறப்ப, பலி கொடுக்குறப்ப புள்ள பயந்துடுவான். பாதுக்கப்பூ”
என்று தினேஷிடம் சொல்லித்தான் அனுப்பினாள் மீனாம்பாள்.
சொக்கன் வேட்டி மட்டும் உடுத்தி திருநீறு பட்டையே சட்டையாக உடுத்தி
பூசை செய்துகொண்டிருந்தார். ஆடு மாலையுடன் தினேஷுக்கு கட்டுப்பட்டு நின்றது.
நேரம் ஆக ஆக சாம்பிராணிப் புகை சொக்கனை சூடேற்றியது.
“ஏஏஏஏஏஏ.....” என்று குரல் போட்டு கிழக்கு நோக்கி ஓடினார் சொக்கன்.
இதை எதிர்பாரா பிரவீனின் உடல் ஒரு குலுக்கு கண்டது. அவரை பிடிப்பதற்கே தயாராக
நின்றவர்கள் மடக்கி பிடித்தார்கள். வெட்டரிவாளை கையில் கொடுத்தார்கள்.
முனி ஆட ஆரம்பித்தார்.
காஷ்மீரை கொண்டு வந்தார்கள்.
“பின்னாடி திரும்பிக்க! பார்த்தா பயந்திடுவ!” என்று சொல்லி பிரவீனை
தூக்கி தொழில் போட்டுக்கொண்டான் தினேஷ்.
இரண்டாள் தூக்கவேண்டிய வெட்டரிவாளை முனி தூக்கி பிடிக்கையில் சுமை
தாங்காமல் கைகள் நடுங்கின. நிலைமையை உணர்ந்து சின்னான் காஷ்மீரின் தலையில் நீர்
தெளித்தான். தலை சிலுப்பவே இல்லை. மீண்டும் ஊற்றினான். ‘செவனேன்’ என்று நின்றது.
முனி வெட்டரிவாளை கீழிறக்கி மண்ணில் ஊன்றி அதன் ஒத்தாசையில் நின்று, “என்னடா
எதுவும் தப்புதண்டா செஞ்சிட்டியா?” என்று கேட்டடார் முனி.
“பொல்லாத சாமியாக்கும் சொல்லிடு”.
“என் புள்ள சத்தியமா ஒரு தப்பும் செய்யல சாமி” என்று உள்ளங்கை
வியர்க்க சொன்னான், தினேஷ்.
மீண்டும் வெட்டரிவாளை உயர்த்தி “இப்ப உத்தரவு கொடுக்கப்போறியா
இல்லையா?” என்றதும் காஷ்மீர் சிலுப்பியது.
‘மேஅஅஅஅ’
திரும்பி பார்த்த பிரவீன் முகத்திலும் கொஞ்சம் ரத்தம் தெரித்தது.
‘காஷ்மீர்’ முண்டமானது.
அடுத்த நாள் பிரவீனுக்கு காய்ச்சல் கண்டது. நடுச்சாமத்தில் திடுக்கிட்டு
எழுந்தவன், “காஷ்மீர்! காஷ்மீர்!” என்றான்.
“புள்ள பயந்திருக்கு. என்னய்யா வேணும்?” என்றாள் மீனாம்பாள், பிரவீனை மடியில்
சாய்த்துக்கொண்டு.
“காஷ்மீர ஏன் ஆத்தா வெட்டுனாங்க?”
“உங்கப்பா காஷ்மீர்ல இருக்கப்ப முனியைய்யா தான் பாதுகாப்பா இருந்தாரு
உங்கப்பாருக்கு. வேண்டுதல செய்யாட்டி முனி கொவம்கொண்டுக்கும். அதான் நம்ம காஷ்மீர கொட
குடுத்தோம். இனி ஒரு பயமும் இல்ல. நம்மல முனியைய்யா பத்திரமா பாத்துக்குவாரு. நீ
துங்கு சாமி” என்று சொல்லி ஒரு பிடி திருநீரை அவன் நெற்றியில் பூசினாள்.
பிரவீன் சற்று நீரத்தில் தூங்கிப்போனான். மீனாம்பாளும்.
காஷ்மீரின் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது
காதில்லாதவர்களுக்கு.